மைத்திரியுடனான சந்திப்புக்கு குறித்து மகிந்தவுக்குத் தெரியாதாம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நாளை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியாது என்று அவரது பேச்சாளர், தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், கட்சியின் முக்கிய உறுப்பினர்களால், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நாளை இந்தச் சந்திப்பு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இத்தகைய சந்திப்புத் தொடர்பான விபரங்கள் எதையும், மகிந்த ராஜபக்ச அறிந்திருக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிற்ற கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நடக்காது போனால், சிறிலங்கா அதிபரைச் சந்திக்க மகிந்த ராஜபக்ச பின்வாங்குகிறார் என்று காட்டுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாக இது இருக்கலாம் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, முன்னர் அறிவிக்கப்பட்டதுபோன்று, மகிந்த – மைத்திரி சந்திப்பு நாளை திட்டமிட்டவாறு இடம்பெறும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.