முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கைது
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சற்றுமுன்னர் சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது, சதொச வில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை 10.15 மணியளவில், சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் பணியகத்தில், ஜோன்ஸ்டன் பெர்னான்டோவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது,
இதையடுத்து, பிற்பகல், 3.15 மணியளவில், அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை, காவல்துறையினர் கொழும்பு பிரதம நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய முன்பாக, முன்னிலைப்படுத்திய போது, நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் நாளை ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை குருநாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.