கிளிநொச்சியில் சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகம் – நாளை திறப்பு
சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகம் ஒன்று, கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில், இந்த பிராந்தியப் பணியகம் நாளை முதல் செயற்படவுள்ளது.
சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் விடுத்த அழைப்பின் பேரில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கொள்கைத் திட்டமிடல், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, மத்திய வங்கியின் கிளிநொச்சி பணியகத்தை திறந்து வைக்கவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா மத்திய வங்கி அமைக்கும் மூன்றாவது பிராந்திய பணியகம் இதுவாகும்.
ஏற்கனவே சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகங்கள், மாத்தறை, மாத்தளை, அனுராதபுர, ஆகிய இடங்களில் 1980களிலேயே நிறுவப்பட்டிருந்தன.
போர் முடிவுக்கு வந்த பின்னர், 2010ம் ஆண்டில், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் மேலும் இரு பிராந்திய பணியகங்களை சிறிலங்கா மத்திய வங்கி நிறுவியிருந்தது.
இந்த நிலையிலேயே புதிய கிளைப் பணியகம் நாளை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது.