வெசாக் கொண்டாட்டங்களில் நிஷா பிஸ்வால் – இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டார்
அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக, பங்களாதேசில் பயணம் மேற்கொண்டிருந்த, உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், அங்கிருந்து கொழும்பு வந்திருந்தார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் இணைந்து, அரசியல் சந்திப்புகள், மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.
நேற்று மதியம், ஜோன் கெரி சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு, நைரோபி நோக்கிப் பயணத்தை மேற்கொண்ட நிலையில், நிஷா பிஸ்வால் கொழும்பிலேயே தங்கியிருந்து, வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
நேற்றிரவு, கங்காராம விகாரையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற வெசாக் வழிபாட்டில், நிஷா பிஸ்வாலும் கலந்து கொண்டிருந்தார்.
இன்று அவர், சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.