பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.
பசில் ராஜபக்ச சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து மணி நேரம் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட பேச்சுக்கள் இடம்பெற்றதை, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், விளக்கமறியலில் உள்ள கைதியை எந்த நேரத்திலும் சந்தித்துப் பேசுவதற்கு சட்டத்தின் இடமளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த அதுரலியே ரத்தன தேரரும், மகிந்த ராஜபக்சவுக்காக பரப்புரை செய்த பசில் ராஜபக்சவும், நீண்டநேரம் பேச்சுக்களை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமக்கு எதிரான அணியினருடன், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பசில் ராஜபக்ச இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.