ஜோன் கெரியுடன் சிறிலங்காவுக்கு படையெடுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரிகள்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலரின் குழுவில் இணைந்து கொள்வதற்காக, பங்களாதேசுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த, தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் டாக்காவில் இருந்து கொழும்பு வந்தடைந்துள்ளார்.
அதேவேளை, ஜோன் கெரியுடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் மூத்த ஆலோசகரும், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளருமான ஜோஸ்வா வைற், அமெரிக்க இராஜாங்கச் செயலரின் தலைமை அதிகாரி ஜொன் பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மேரி ஹாப், மற்றும், பென்டகனில் உள்ள கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியின் பிரதிநிதியான, வைஸ் அட்மிரல் குட் ரிட் ஆகியோரும் கொழும்பு வரவுள்ளனர்.
ஜோன் கெரியின் குழுவில், மொத்தம் 35 அமெரிக்க அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக இராஜாங்கத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
இவர்கள் சிறிலங்கா அரசாங்கத் தரப்புடனான சந்திப்புகளில், அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் இணைந்து பங்கேற்கவுள்ளனர்.