சிறிலங்காவில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது – என்கிறது சீனா
சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சிறிலங்காவில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பல இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்கு உதவும் நோக்கம் மட்டும் சீனாவுக்கு இருந்தது.
ஆனால், சில சீனத் திட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சீனாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
துறைமுக நகரத் திட்ட பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாவிட்டால், இருதரப்புக்கும் ஒரு சட்ட ரீதியான உடன்பாடு உள்ளது என்ற வகையில், நீதிமன்றத்தில் சென்று தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் சீனா நெருக்கமான நண்பராக இருந்தது என்று அண்மைக்காலமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
சிறிலங்காவின் நண்பனே சீனா. யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நாம் சாத்தியமான வகையில் உதவுகிறோம்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவை மீளக் கட்டியெழுப்ப நாம் உதவினோம்.
அப்போது மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தார். அவரைத் தெரிவு செய்தது சிறிலங்கா மக்களே.
அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அதிகாரத்தில் இருந்திருந்தாலும் கூட சீனா உதவி செய்திருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.