முல்லை., கிளிநொச்சி மாவட்டங்கள் சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனம்
வடக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சிறப்பு கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கல்வி அமைச்சர் அகிர விராஜ் காரியவசம் நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில், கபொத உயர்தரம் மற்றும், கபொத சாதாரண தர தேர்ச்சி மட்டங்களை அதிகரிக்கவும், பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துதலை தடுக்கவும் இந்த புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கின் கல்வித் தரதைதை உயர்த்தும் திட்டத்தின் கீழ், பாடசாலைகளின் கட்டங்கள் திருத்தியமைக்கப்படவுள்ளதுடன், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆறு மாதங்களுக்குள் கல்வி முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்று வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சிறிலங்கா பிரதமர் பணித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சிறிலங்காவின் கல்வி அமைச்சர், வடக்கிலும், தோட்டப்பகுதிகளிலும், தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோரை நேர்முகத் தேர்வின் பின்னர் ஆட்சேர்ப்புச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.