கோத்தா, அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோர் வெளிநாடு செல்லத் தடை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்ட நால்வர் வெளிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு இன்று காலி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவன்ற் கார்டே நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும் வரை, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களை வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிவானிடம் கேட்டிருந்தனர்.
இதற்கமைய, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, அவன்ற் கார்டே பாதுகாப்புச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்சுள யாப்பா ஆகியோரை வெளிநாடு செல்ல காலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.