குற்றம் செய்த படையினரைத் தண்டிப்பது அவசியம் – ஜெனரல் சரத் பொன்சேகா
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படுவதை தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தை விட்டுத் தப்பிஓடிய படையினருக்கு, அடைக்கலம் அளித்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஆனாலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, அதனை விசாரிக்காமல், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு.
இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் ஒரு சிலர் குற்றங்களை புரிந்திருந்தால், அதனை விசாரித்து அவர்களை தண்டிப்பது அவசியம்.
அனைத்துலக அழுத்தங்கள் காரணமாகவே உள்நாட்டு விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக கூறப்படுவது தவறு.
இதற்கு முன்னரும், குற்றச்சாட்டுக்கள் வந்தபோது பொது விசாரணைகள் நடந்திருக்கிறது. இராணுவத்தினருக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்