ஐ.நா உயர் பிரதிநிதி ரணிலுடன் சந்திப்பு – விசாரணையை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்
சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது பரஸ்பரம் கரிசனை கொண்டுள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தனது சிறிலங்கா பயணத்தின் போது, கண்டறிந்த விடயங்களை உள்ளடக்கியதாக இந்தச் சந்திப்பில், ஐ.நாவின் நிலைப்பாடுகளை சிறிலங்கா பிரதமரிடம் ஜெப்ரி பெல்ட்மன் எடுத்துக் கூறியுள்ளார்.
உள்நாட்டு விசாரணையை மிகவிரைவாக மேற்கொள்ளுமாறும், குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.