விசாரணை அறிக்கையை செப்ரெம்பர் வரை பிற்போட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இணக்கம்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையை, வரும் செப்ரெம்பர் மாதம் வரை பிற்போடுவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் புதிய நீதி அமைப்பு ஒன்றை உருவாக்க கால அவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நதா விசாரணை அறிக்கையை வெளியிடுவதை சில மாதங்கள் தாமதிக்குமாறு, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கோரியிருந்தது.
இந்தநிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவருக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எழுதியுள்ள கடிதம் ஒன்றில், கடந்த ஆண்டு மார்ச் மாத அமர்வில் உருவாக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடுவதை, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள 30வது அமர்வு வரை பிற்போடுமாறு பரிந்துரை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் மாறியுள்ள சூழ்நிலைகளின் அடிப்படையிலும், பரந்தளவிலான ஒத்துழைப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து கிடைப்பதற்கான சமிக்ஞை, தனக்கு கிடைத்துள்ள நிலையிலும், அறிக்கைக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாலும். தான் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடப்படும் நாளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையே முடிவு செய்யும் என்ற போதிலும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்து அந்த தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு ஒரு குரல் https://www.facebook.com/Serendibmedia