புதிய அரசின் கொள்கைகளை ஜெனிவாவுக்கு விளக்கினார் ஜயந்த தனபால- தொடர்ந்து பேச இணக்கம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
ஜெனிவாவில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக, அவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கமளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ருக்கரையும், பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் கூட, சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஜயந்த தனபால சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது, புதிய அரசாங்கத்தின் கொள்கைகள், அணுகுமுறைகள் தொடர்பாக அவர் விபரித்துக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இருதரப்பும் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடவும் இணக்கம் கண்டுள்ளன.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.