மேலும்

யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு

mahinda-yoshithaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு மறுநாளான கடந்த ஜனவரி 9ம் நாள், சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவுக்கு, லெப்.யோசித ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக சிறிலங்கா கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ஆனாலும், அவரது பதவி விலகல் கடிதத்தை கடற்படை தளபதி ஏற்றுக் கொள்ளவில்லை என்று கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, யோசித ராஜபக்சவை கடற்படையில் இருந்து வெளியேற அனுமதிக்கும் ஆவணங்களில் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, யோசித ராஜபக்ச கடற்படையில் இணைந்த விதம், வெளிநாட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட முறை, பணியில் இருந்த போது அரசியலில் ஈடுபட்டமை குறித்து விசாரிக்க, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *