பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார்
சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் இன்று தொடக்கம் எதிர்வரும் 30ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது அவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் என்பதுடன், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், பிரித்தானியாவின் உயர்மட்ட அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது பயணமும் ஆகும்.
இந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது ஹியூகோ சுவைர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து, மனித உரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடுவார்.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளும் அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சிவில் சமூகத்தையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதுடன், பிரிட்டிஸ் கவுன்சிலுக்கும் செல்லவுள்ளார்.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.