மார்ச் மாதம் கொழும்பு வருகிறார் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் முடிவில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அவர், சிறிலங்காவுக்கு வருமாறு இந்தியப் பிரதமரிடம் தாம் அழைப்பை முறைப்படி நேரில் கையளித்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
கடைசியாக 1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அதற்குப் பின்னர், இந்தியப் பிரதமராக இருந்த எவரும், சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.
நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாஜ், மன்மோகன் சிங் ஆகியோர் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மட்டுமே, கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமரின் பயண நாள் குறித்து இருநாடுகளும் இணைந்து தீர்மானிக்கும்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதற்கு சில நாட்கள் முன்னதாகவோ அல்லது, பின்னதாகவோ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கொழும்புக்குப் பயணம் செய்யவுள்ளார்.