‘றோ’ அதிகாரியின் இடமாற்றம் வழக்கமானது – என்கிறது இந்தியா
கொழும்பில் இருந்து ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்படவில்லை என்றும் அது வழக்கமான இடமாற்றமே என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் முன்னின்றவரான ‘றோ’ அதிகாரி திருப்பி அழைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்,
“யார் இதனைக் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு வழக்கமான இடமாற்றம்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இது பொதுவான நடைமுறை.
சிறிலங்காவுக்குச் செல்லும் இந்திய இராஜதந்திரிகள் மூன்று ஆண்டுகளில் திருப்பி அழைக்கப்படுவர்.
இது வழக்கமானது. அவ்வாறு தான் நடந்துள்ளது. இது வெளிப்படையாக இடம்பெற்ற விடயம்” என்று தெரிவித்தார்.
மீண்டும் இதுபற்றி அவரிடம் வினவிய போது, கடந்த ஆண்டு கொழும்பில் இருந்து புதுடெல்லிக்கு மாற்றப்பட்ட அதிகாரிகள் அனைவரும் மூன்று ஆண்டு காலப் பணியை நிறைவு செய்துள்ளனர். இதுதான் தமது கடைசி நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.