வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்
புதிய அரசாங்கம் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றாது என்றும், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஆசி பெற்ற பின்னர், கருத்து வெளியிட்ட அவர்,
“அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்றுவதில்லை என்பதில் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெளிவான நிலைப்பாட்டில் உள்ளார்.
அவர் நாடு பிளவுபடுவதற்கு அனுமதிக்கமாட்டார்.
சிறிசேன வெற்றி பெற்ற பின்னர் வடக்கில் இருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்படும் என்று பல்வேறு பொய்யான அறிக்கைகள் பரப்பப்பட்டன. ஆனால் அத்தகைய தகவல்கள் பொய்யானவை.
படையினரை புதிய அரசாங்கம் கௌரவமாக நடத்துவதுடன், அவர்களுக்கான வசதிகளையும் செய்து கொடுக்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.