அமெரிக்கா சொன்னபடி செய்து விட்டேன் – என்கிறார் மகிந்த
அமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
கொழும்பில் நேற்றுமாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு வெளியே கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தான் அதிகாரப் பசி கொண்டவன் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி யுகம் தொடர்வதற்கு மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்துவதாக கூறிய மகிந்த ராஜபக்ச, தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் தமது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையாளருக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், முன்னதாக அமைதியான முறையில் தேர்தலை நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் கோரியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் கூறினார்.
தோல்வி நெருங்குவதை உணர்ந்ததும் தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு, அலரி மாளிகையை விட்டு வெளியேற விருப்பம் வெளியிட்டதாகவும், மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐந்து நிமிடம் கூட இங்கு தங்கியிருப்பதற்குத் தாம் விரும்பவில்லை என்றும், எந்த நேரமும், இங்கு வரலாம் என்றும், நாம் அவருக்கு ஆதரவளிப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.