6 ஆயிரம் ரூபாவுடன் நடந்த மைத்திரியின் பதவியேற்பு – படங்களுடன் செய்தித்துளிகள்
கொழும்பில் நேற்று மாலை நடந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பதவியேற்பு விழாவுக்கு 6000 ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான பூங்கொத்துக்கும், சுதந்திர சதுக்கத்தில் ஏஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்துக்குமே இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவர் கொடுத்த பூங்கொத்து
சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டவுடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.
முதலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதுடன், கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் அரசியல் தலைவர்கள் பலரும், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் யஸ்வந்திகுமார் சின்ஹா நேற்று மாலை, சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, இந்திய அரசாங்கத்தின் சார்பில் அவருக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவையில் முக்கிய ஐதேக தலைவர்கள்
மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று அல்லது நாளை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாகவே, பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்பேற்றிருந்தார்.
இதையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.
புதிய அமைச்சரவையில் 25 பேர் மட்டுமே இடம்பெறுவர் என்று மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதன்படி, ஐதேகவின் முக்கிய தலைவர்கள் பலரும், சஜித் பிரேமதாச, கரு ஜெயசூரிய, ரவி கருணாநாயக்க, கபீர் காசிம், ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, லக்ஸ்மன் கிரியெல்ல, காமின ஜெயவிக்கிரம பெரேரா, மங்கள சமரவீர, தலதா அத்துகோரள, விஜேதாச ராஜபக்ச உள்ளிட்டோர் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
புதிய செயலர் நியமனம்
சிறிலங்கா அதிபரின் செயலராக பி.பி.அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய செயலர் இன்று காலை தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மைத்திரி அரசுக்கு ஒத்துழைக்க முடிவு
சிறிலங்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் செயற்திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதற்கு ஆதரவளிக்கப் போவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.
அரசியலமைப்பு மாற்றம் உள்ளிட்ட 100 நாள் செயற்திட்டத்துக்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.