சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு மகிந்தவிடம் வலியுறுத்தினார் ஜோன் கெரி
சிறிலங்காவில் இன்று அதிபர் தேர்தல் வன்முறைகளோ, அச்சுறுத்தல்களோ இன்றி, சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நேற்றுக்காலை (அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு) சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி,
“தேர்தல் பரப்புரைகளின் போது நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக வெளியாகின்ற அறிக்கைகள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
சிறிலங்காவில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் செயல்முறைகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. தேர்தல் நம்பகமாகவும், அமைதியாகவும், இடம்பெற வேண்டும்.
அதற்கமைய, அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி சிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனவரி 8ம் நாள் நடைபெறும் தேர்தல் சுதந்திரமாகவும், வன்முறைகளின்றியும், அச்சுறுத்தல்களின்றியும் நடத்தப்படுவதையும், வாக்கு எண்ணும் பணி நம்பகமாகவும், வெளிப்படையாகவும் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிறிலங்கா தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கைகளை அவரும் பார்த்திருக்கிறார். நாமும் பார்த்திருக்கிறோம்.
சிறிலங்காவின் நிலைமைகளை நாம் தொடர்ந்து உன்னிப்பாக அவதானிப்போம்.
வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்படுவதையும், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம், காவல்துறை, மற்றும் எல்லா அரசியல் கட்சிகளையும் கோருகிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.