திரு.பிரபாகரன் என்று அழைத்ததை மறந்து போனாரா மகிந்த? – மங்கள சமரவீர கேள்வி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, திரு.பிரபாகரன் என்று, தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியது குறித்து, சிறிலங்கா அரசாங்கம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
தீவிரவாத தலைவரை மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைப்பதா என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், இதுகுறித்து, மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்.
“2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இராஜதந்திரிகள் மத்தியில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையில், திரு.பிரபாகரன் என்று குறிப்பிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை திரு.பிரபாகரன் என்று என்று குறிப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
அதற்காக, எதிரணியினர், அங்கீகாரத்தைக் கொடுக்க முனையவில்லை.
என்றாலும், எந்தவொரு மனிதரையும், திரு என்று அழைப்பதில் தவறில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.