சிறிலங்காவுக்கு கடல்சார் பாதுகாப்பு உதவிகளை அளிக்கவுள்ளது அமெரிக்கா
சிறிலங்காவுக்கு கடர்சார் பாதுகாப்பு உதவிகளை வழங்கும் திட்டம், அமெரிக்காவுக்கு இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய விவகாரங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், எனவே கடல்சார் பாதுகாப்பில் அமெரிக்காவின் பங்கு என்ன என்றும், இந்த விவகாரத்தில் சிறிலங்காவின் பங்கை அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலா அல்லது ஏனைய பிராந்தியங்களிலா எதிர்பார்க்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே, சிறிலங்காவின் நடவடிக்கைகள் தொடர்பான மேலதிகமான விபரங்கள் தன்னிடம் இல்லை என்றும், ஆனால், நிச்சயமாக சிறிலங்காவை ஒரு பங்காளராக பார்க்கிறோம், சிறிலங்காவுடனான உறவுகளை நாம் கட்டியெழுப்புகிறோம், ஆனால், ஜோன் கெரியின் கருத்துகள் தொடர்பான மேலதிக விபரங்கள் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, கடல்சார் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்காவுக்கு எவ்வாறு உதவி அளிப்பது என்பது தொடர்பான திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருக்கிறதா என்று, எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர், ஆமாம் என்று பதிலளித்தார்.