சிறிதரனின் பதவி பறிப்பு – தமிழ் அரசின் நாடாளுமன்ற குழு தலைவராக சாணக்கியன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரனை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அறிவுறுத்தியிருந்தது.
அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த நிலையில், அவரை கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அண்மையில் திருகோணமலையில் நடந்த அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக எம்.ஏ. சுமந்திரன் அறிவித்திருந்தார்.
எனினும், சிறிதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்படவில்லை என்று கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியிருந்த நிலையில், கட்சியின் செயலாளரினால் புதிய நாடாளுமன்றக் குழுத் தலைவராக இரா.சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
