சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கு உதவ 37 ஆலோசகர்கள்
சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் ஏழு அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 37 ஆலோசகர்களை நியமித்துள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த தகவல்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதிபர் அனுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்திற்கு 10 ஆலோசகர்களையும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 14 ஆலோசகர்களையும் நியமித்துள்ளார்.
அதிபர் மற்றும் பிரதமருக்கான ஆலோசகர்கள் தன்னார்வத்துடன் பணியாற்றுகிறார்கள்.
அரசாங்க சம்பளம் அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவதில்லை. பிரதமரின் ஆலோசகர்கள் அனைவரும் கல்வித் துறையில் நிபுணர்கள்.
மேலும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்திக்கு மூன்று ஆலோசகர்களும், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு மூன்று ஆலோசகர்களும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவுக்கு இரண்டு ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்திகே, வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு தலா ஒரு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆலோசகர்கள் சம்பளமின்றி வேலை செய்யும் அதே வேளையில், சமரசிங்க, பட்டபெண்டிகே மற்றும் அபேரத்ன ஆகிய மூன்று பேர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகனங்களைப் பெறுகின்றனர்.
அமைச்சர் சமரசிங்கவின் ஆலோசகர் மாதத்திற்கு 227,695 ரூபாவை பெறுவதுடன், 46,695 ரூபாவை எரிபொருள் கொடுப்பனவாகப் பெறும் உரிமை உள்ளது.
அமைச்சர் பட்டபெண்டிகேவின் ஆலோசகர் மாதத்திற்கு 213,635 சம்பளம் மற்றும் ஒரு வாகனம் மற்றும் டீசலுக்கு 47,685 ரூபாவைப் பெறுகிறார்.
அமைச்சர் அபேரத்னவின் ஆலோசகரான முன்னாள் அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் 117,150 கொடுப்பனவு, வாழ்க்கைப் படி 17,800 மற்றும் எரிபொருளுக்கு 46,695 ரூபாவைப் பெறுகிறார்.
