அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கை எதிர்கொள்ளும் ஆபத்தில் கோத்தா – எச்சரிக்கிறார் அமெரிக்க பேராசிரியர்
அமெரிக்கக் குடிமகன் என்ற வகையில், அமெரிக்கச் சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களுக்காக சட்டத்தின் முன்நிறுத்தப்படும் ஆபத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்வதாக அமெரிக்க சட்டப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழில், அமெரிக்க சட்டப் பேராசிரியரான ரயன் கூட்மன் (Professor Ryan Goodman) எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘உலகில் எங்கு போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதில் பாதிக்கப்பட்டவர் அல்லது குற்றம்புரிந்தவர் அமெரிக்க குடிமகனாக இருந்தால், அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்த வழிசெய்யும், 1996ம் ஆண்டின் போர்க்குற்றச் சட்டத்தின் கீழ், அமெரிக்க குடிமகன் என்ற வகையில் கோத்தாபய ராஜபக்சவை நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.
கோத்தாபய ராஜபக்ச ஒரு அமெரிக்க குடிமகன் என்ற வகையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்திருக்கிறார், லொயோலா சட்ட பாடசாலையில், கணினி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சிறிலங்கா செய்யாது போனால், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றவியல் வழக்கை திறப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அத்தகைய விசாரணைக்கு அமெரிக்கா உதவ முடியும்.
அது புதிய அரசாங்கத்துக்கு தனது வீட்டைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும், அமையும்.
கோத்தாபய ராஜபக்ச ஒரு அமெரிக்க குடிமகன் என்பதால், இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதான குற்றச்சாட்டும் அமெரிக்காவை அவ்வளவு பாதிக்காது.
ஐ.நா விசாரணைகள் மிக அதிகமானவும் மிகக்குறைந்தளவிலானதும் விளைவுகளை ஏற்படுத்தும்.
மிகஅதிகமானது என்னும் போது, பொறுப்புக்கூறலுக்கு முழுமையாக அழுத்தம் கொடுக்கும் போது, அது புதிய அரசாங்கத்தைச் சீர்குலைத்து விடும்.
அத்துடன் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளையும் கொதிநிலைக்கு கொண்டு செல்லும்.
மிகச் சிறிய விளைவுகள் என்னும் போது, ஐ.நா விசாரணைகளுக்கு, எந்தப் பிடியும் இல்லை.
குற்றவியல் நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு செல்லும் அதிகாரம் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இல்லை. தண்டனையை விதிக்கின்ற அதிகாரமும் அதற்கு இல்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.