19ஆவது திருத்தம் மைத்திரிக்கு பொருந்தாவிடின் தனக்கும் பொருந்தாது என்கிறார் மகிந்த
19 ஆவது திருத்தச்சட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தை பாதிக்காது என்றால், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடத் தனக்கும் தடையிருக்காது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “2015 அதிபர் தேர்தலை 19 ஆவது திருத்தச்சட்டம் பாதிக்காது என்றால், அடுத்த அதிபர் தேர்தலில் நானும் போட்டியிடத் தடையிருக்காது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால், நானும், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் கூட அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.