முழு அடைப்புப் போராட்டத்தினால் முடங்கியது வடக்கு, கிழக்கு பகுதிகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்கக் கோரி, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால், தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் முற்றாகச் செயலிழந்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு, தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தனியார் அமைப்புகள், சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் இன்று காலை தொடக்கம் இடம்பெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டத்தினால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
போக்குவரத்து சேவைகள் இடம்பெறாததால், சாலைகளும் பேருந்து நிலையங்களும் வெறிச்சோடியுள்ளன. வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், எப்போது பரபரப்ப்பாக காணப்படும் நகரங்களும், கடைத்தெருக்களும் ஆளரவமின்றிக் காணப்படுகின்றன. சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் இன்று வருகை தரவில்லை. வங்கிகள், தனியார் நிறுவனங்களும், மூடப்பட்டுக் காணப்படுகின்றன.
அரச நிறுவனங்களில் மிகக் குறைந்தளவு பணியாளர்களே சேவையில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய பணிகள் மாத்திரம் இடம்பெற்று வருகின்றன.
வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐந்து நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே கிளிநொச்சியிலும், வவுனியாவிலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த காணாமல் போனவர்களின் உறவுகள் இன்று ஏ-9 வீதியை மறித்து கொளுத்தும் வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர் தாயகப் பகுதியெங்கும் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.