இந்திய – சிறிலங்கா கடற்படைகள் கடல் எல்லையில் சந்திப்பு
இந்திய – சிறிலங்கா கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான 27 ஆவது அனைத்துலக கடல் எல்லைச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
காங்கேசன்துறைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் கட்மாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா கடற்படையின் வடபிராந்திய தளபதி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தலைமையிலான சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், தமிழ்நாடு-புதுச்சேரி கடற்பிராந்திய கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் அலோக் பட்னாகர் தலைமையிலான இந்திய கடற்படை அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் பேச்சு நடத்தினர்.
இதன்போது கடத்தல்கள்கள் மற்றும் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.