காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரை
புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன நேற்று இந்தத் தகவலை வெளியிட்டார்.
காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்பமிட்டார்.
இந்தச் சட்டத்தின்படி காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக, எல்லா இனங்களையும் சேர்ந்த ஏழு பேர் நியமிக்கப்படுவர்.
அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின்படி, சிறிலங்கா அதிபரே இந்த உறுப்பினர்களை நியமிப்பார்.
காணாமற்போனோரைத் தேடுதல், கண்டறிதல், காணாமற்போனோரின் உறவினர்களுக்கான உதவிகளை வழங்குதல், காணாமற்போனோர் பற்றிய தரவுகளை ஆவணப்படுத்தல் ஆகிய பணிகள் இந்தச் செயலகத்தின் மூலம் முன்னெடுக்கப்படும்.
காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவோர், உண்மை கண்டறிதல், விசாரணைகளை மேற்கொள்ளல், மனித உரிமை சட்டங்கள், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்கும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயலகத்தின் செயலாளர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள, மனோ தித்தவெல, சந்திரிகா குமாரதுங்க தலைமையில் செயற்படும் நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.