திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இந்திய முதலீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர்
திருகோணமலையில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா படையினரின் வசமுள்ள நிலங்கள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுடன்றத்தில் நேற்று ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய சிறப்புப் பொருளாதார வலயம் திருகோணமலைத் துறைமுகப் பகுதியை உள்ளடக்கியதாக அமைக்கப்படாது.
திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் அல்லது திருகோணமலை மாவட்டத்தில், இந்தியா சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பது தொடர்பாக எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.
சி்ல இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்தன. எனினும் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
எனினும், அந்த முதலீடு குருநாகலுக்கே பொருத்தமானது என்று சிலர் பரிந்துரைத்துள்ளனர்.
திருகோணமலையில் முதலீடு செய்வது குறித்து சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றும் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. பொலன்னறுவ மீதும் எமது கவனம் இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.