மேலும்

மாகாணசபை தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போட அரசாங்கம் முடிவு

அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மாகாணசபைத் தேர்தல்களை காலவரையின்றிப் பிற்போடுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முடிவை எடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மாகாணசபைத் தேர்தலை நடத்த என்பிபி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபரால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மாகாணசபைத் தேர்தல்களை மூலோபாய ரீதியான இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த து.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.டி.லால்காந்தவும்,  அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், கடந்தவாரம் ஜே.வி.பிக்குள் நடைபெற்ற விரிவான பல சுற்று கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மாகாணசபைத் தேர்தல்களை காலவரையின்றி பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

​​மாகாணசபை முறைமை, வடக்கு,கிழக்குக்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு பொறிமுறை குறித்த ஜே.வி.பியின் நிலைப்பாடு என்பன குறித்து, இந்த கலந்துரையாடல்களின் போது ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த விடயங்களில் இறுதி முடிவு எட்டப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *