மேலும்

அமெரிக்காவிலேயே தங்கியது சிறிலங்கா குழு- பேச்சுக்களை தொடர முடிவு.

அமெரிக்காவுடன், பேச்சு நடத்துவதற்கு சென்ற சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவினர், அங்கேயே தங்கியிருந்து உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா மீது  ட்ரம்ப் அரசாங்கம் 44 வீத வரியை அறிவித்துள்ளதை அடுத்து, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜமிசன் கிரீருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உயர்மட்ட குழு ஒன்று கடந்த வாரம் வொஷிங்டனுக்கு பயணம் மேற்கொண்டது.

இந்த குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜமிசன் கிரீர் மற்றும், உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது அமெரிக்கா எதிர்பார்ப்பது போன்று பரஸ்பர வரியை குறைப்பதற்கு ஏற்ற வகையில், வர்த்தக இடைவெளியை குறைப்பதற்கான முன்மொழிவுகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட, அமெரிக்கா அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிடம் இருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில் எரிவாயு மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தயாராக இருப்பதாக சிறிலங்கா குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் பரஸ்பர வரியை குறைப்பதற்கு, சிறிலங்கா முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமெரிக்காவிடமும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து பேச்சுக்களை நடத்த இரண்டு தரப்புகளும் இணங்கியுள்ள நிலையில், சிறிலங்காவின் உயர்மட்ட குழு தொடர்ந்து வொஷிங்டனிலேயே தங்கி உள்ளது.

அவர்கள் அங்கு தொடர்ந்து அடுத்த வாரமும் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பரஸ்பர வரியினால்,  சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதித்துறை கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்பதால் இந்த விவகாரத்திற்கு கூடிய விரைவில் தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் வொஷிங்டன் சென்ற சிறிலங்கா குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *