தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்
இந்திய அரசிடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.
தமிழர் தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்திருந்த போது, உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய வேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
1988ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி ஆரம்பித்த அவரது உண்ணாவிரதப் போராட்டம், 31 வது நாள், ஏப்ரல் 19ஆம் திகதி, அவரது சாவுடன் முடிவுக்கு வந்தது.
அன்னையர் முன்னணியின் சார்பில், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றிலில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்னை பூபதி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
தியாகச் சாவடைந்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பில்
அன்னை பூபதியின் 37 வது ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னையின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
சிறிலங்கா காவல்துறையின் தடைகளுக்கு மத்தியில் மக்கள் எழுர்ச்சியுடன் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணத்தில்
தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.
வவுனியாவில்
அன்னை பூபதியின் 37 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, வவுனியா பொங்கு தமிழ் நினைவுத்தூபி முன்றலில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு தீபம் ஏற்றியும், மலர் தூபியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரிப் போராட்டம் நடத்தப்படும் இடத்திலும், அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
கிளிநொச்சியில்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளைப் பணிமனையில் இன்று அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக் கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார்.
அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, உள்ளிட்ட பலரும் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
மட்டக்களப்பில் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 37 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை, நடத்துவதற்கு சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்றிருந்தனர்.
மட்டக்களப்பு காவல்துறை தலைமையக பிரிவு, சந்திவெளி,, காத்தான்குடி, கொக்குவில் ஆகிய காவல் நிலையங்களினால், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் ஆகிய மன்றுகளின் ஊடாக , சபாரெத்தினம் சிவயோகநாதன், செல்வகுமார், அரவிந்தன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க தடையுத்தரவு பெறப்பட்டது.
அதேநேரம், மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் அமைதியான முறையில் நினைவு கூருவதற்கு மன்று அனுமதி வழங்கியிருந்தது.