சிறிலங்கா அதிபரின் நிலைப்பாட்டை வரவேற்கிறது சீனா
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வணிக உடன்பாடு குறித்து மீளாய்வு செய்யப் போவதில்லை என்ற சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறிலங்கா அதிபரின் இந்த கருத்துக்களை சீனத் தூதரகம் மிகவும் பாராட்டுகிறது.
உடன்பாட்டை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கும் சிறிலங்கா தரப்புடன் இணைந்து செயற்பட பொருத்தமான நிறுவனங்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளது.
சிறிலங்காவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மிகவும் சீனா மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் கட்டுப்பாடும் முற்றிலும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்கா கடற்படையின் கைகளில் தான் உள்ளது, இது சிறிலங்காவின் ஏனைய பிற துறைமுகங்களிலிருந்து வேறுபடவில்லை” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.