கோத்தா – மோடி சந்திப்பில் ‘13’ குறித்துப் பேசப்படாது?
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வரும் வெள்ளிக்கிழமை புதுடெல்லிக்குப் பயணமாகிறார்.
சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, தமிழர் பிரச்சினை குறித்து, இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக புதுடெல்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன், சிறிலங்காவில் தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்களைத் தொடருவது குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும், இது பெரும்பாலும் தமிழர்களுக்கு பயனளிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், கடந்த அரசாங்கங்களினால் விவாதிக்கப்பட்டு வந்த 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து, கோத்தாபய ராஜபக்சவுடனான முதல் சந்திப்பில், இந்தியப் பிரதமர் மோடி அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் புதுடெல்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.