எம்சிசி உடன்பாடு கையெழுத்திடப்படுவது சந்தேகமே – அமெரிக்க அதிகாரி
சிறிலங்காவில் எம்சிசி உடன்பாடு குறித்து பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது என்று, மிலேனியம் சவால் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் தெரிவித்துள்ளார்.
எம்சிசி உடன்பாட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்த பின்னர், அதற்கு எதிராக மகிந்த ராஜபக்ச தரப்பு கடுமையான எதிர்ப்பையும், தீவிரமான பரப்புரைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அதேவேளை தேர்தல் முடியும் வரை அந்த உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டாம் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம், அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.
இந்தநிலையில், கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மிலேனியம் சவால் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன்,
“இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுமா என்பது தெளிவில்லாமலேயே உள்ளது.
இது எம்சிசியின் பணிப்பாளர் குழு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான், உள்ளது.
உடன்பாடு குறித்து தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுவதால், கையெழுத்திடப்படுமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை உள்ளது, ”
எம்சிசி இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை,
டிசம்பர் 9 ஆம் நாள் நடக்கவுள்ள எம்சிசியின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தில் இந்த முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.