எம்சிசி உடன்பாட்டை மகாநாயக்கர்களிடம் வெளியிட்டு பகிரங்கப்படுத்துவோம் – பந்துல
மிலேனியம் சவால் உடன்பாட்டில், சிறிலங்காவுக்கு எதிரான பல விடயங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை அதிபர் தேர்தலுக்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும், எச்சரித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.
“நாட்டுக்கு எதிரான உடன்பாடுகளை செய்து, தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் ஐதேக தற்போது இருக்கிறது.
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் உடன்பாட்டின் ஊடாக நாட்டுக்கு 480 மில்லியன் டொலர் மாத்திரமே கிடைக்கும், இதற்காக நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது.
மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாட்டு ஆவணங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் உள்ளது. அதன் கருத்துக்கள் அனைத்தும் ஆழமானதாகவும்உள்ளன.
ஆங்கில மொழியிலான ஆவணங்கள் அனைத்தும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் இந்த ஆவணங்கள் அனைத்தும் மகாநாயக்க தேரர்களுக்கு , கையளிக்கப்பட்டு நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.
நாட்டின் இறையாண்மைக்கும், எதிர்கால தலைமுறையினரது முன்னேற்றத்திற்கும் தடைகளை ஏற்படுத்தும் விதமாகவே, இந்த உடன்பாடுஉள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.