அமெரிக்கா இராணுவத்தை சிறிலங்காவுக்குள் நுழைப்பதற்கே எம்சிசி – வாசுதேவ
அமெரிக்க இராணுவத்தை சிறிலங்காவுக்குள் உள்நுழைப்பதே மிலேனியம் சவால் உடன்பாட்டின் பிரதான இலக்கு, என கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“மிலேனியம் சவால் உடன்பாட்டின் பிரதான இலக்கு, அமெரிக்க இராணுவத்தை சிறிலங்காவில் புகுத்துவதேயாகும். அதற்கான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தலே இந்த உடன்பாட்டின் உள்ளடக்கம் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் கூறுகிறார்கள்.
இதன் மூலம் சிறிலங்காவை அபிவிருத்தியடைந்த நாடாக உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.
சிறிலங்காவை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்காக காணி சீர்திருத்த சட்டம் அவசியம் என்று கூறுகின்றனர்.
இந்த சட்டம் எமது ஆட்சி காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது. அந்த சட்டத்தில் வெளிநாடுகளுக்கு சிறிலங்காவின் இடங்களை விற்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனநாயகம் பற்றி தொடர்ச்சியாக பேசும் ஒரு நாடு. எனினும் உள்ளுராட்சி தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்திருப்பதை அறிந்தும் , பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது ஏன்?
மிலேனியம் சவால் உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி என்பன தற்போது ஒன்றிணைந்துள்ளன. இதனால் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
எனவே, இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கான அதிகாரம், தற்போதைய இந்த அரசாங்கத்துக்கு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.