எம்சிசி உடன்பாடு தேர்தலுக்கு முன் கையெழுத்திடக் கூடாது- மகிந்த
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, எம்சிசி உடன்பாடு உட்பட எந்தவொரு உடன்பாடும், வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடப்படக் கூடாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள எம்சிசி உடன்பாடு, அதிபர் தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. ஒரு தீர்க்கமான அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் எந்தவொரு உடன்பாடும், வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடக் கூடாது என்ற வலுவான விதிமுறைகளில் வலியுறுத்த விரும்புகிறோம்.
அதிபர் தேர்தலுக்குப் பின்னரே அத்தகைய உடன்பாடு கையெழுத்திடப்பட வேண்டும்.
இந்த உடன்பாட்டின்,உள்ளடக்கங்கள் பொதுமக்களுக்கு மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தெரியாது.
உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர், அது பகிரங்கப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்.
கிடைக்கக் கூடிய தகவல்களின்படி, இந்த உடன்பாடு வீதி அபிவிருத்தி மற்றும் காணி சீர்திருத்தத்துடன் தொடர்புடையது என்று தெரிகிறது.
ஆனால், இது சரியாக எதைக் குறிக்கிறது மற்றும் நாட்டில் இதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை அரசாங்கம் விளக்கவில்லை.
இந்த உடன்பாடு சிறிலங்காவுக்கு பயனுள்ளதாகவே உருவாக்கப்பட்டது என்றால், ஏன் எல்லாம் இரகசியமாக மறைக்கப்படுகிறது?
இந்த உடன்பாடு பொது மக்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் கையெழுத்திடப்படக் கூடாது என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.