அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது – படையினருக்கு எச்சரிக்கை
சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் எவரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
“இராணுவ மற்றும் காவல்துறையினர், தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர, வேறு எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை.
சேவையில் உள்ள, ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், சீருடையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
தேர்தல் பரப்புரை நோக்கங்களுக்காக அவர்களின் ஒளிப்படங்கள் அல்லது அறிக்கைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும், சேவையில் உள்ள படை அதிகாரிகள் மீது சட்டரீதியாக குற்றச்சாட்டு சுமத்த நடவடிக்கை எடுக்கப்படலாம்.
எதிர்வரும் அதிபர் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக- இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் காவல்துறையினர், பக்கச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும்.” என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதியின் ஒளிப்படம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான சர்ச்சைகளை அடுத்தே பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.