மேலும்

மீறல்களில் ஈடுபட்ட படையினருக்கு விடுதலை – தேர்தல் அறிக்கையில் கோத்தா வாக்குறுதி

போரின் போது மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து சிறிலங்கா படையினரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளார்.

ஆயுதங்களுடன் சரணடைந்த 13,784 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை மன்னிக்கவும், புனர்வாழ்வு அளித்து, விடுவிக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், போர்க்காலத்துடன் தொடர்புபட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட  படையினர்  தொடர்பாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், புனர்வாழ்வு என்பதன் அர்த்தம் என்ன என்று, தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறப்படவில்லை. கோத்தபய ராஜபக்ச தரப்பினரும் அதற்கு மேலதிக விளக்கம் கொடுக்கவில்லை.

சிறிலங்கா படையினர் மட்டுமல்லாமல், போர் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும், புலிகளின் உறுப்பினர்களும் சமூகத்தில் முறையாக மறுவாழ்வு அளிக்கப்பட்டு மீள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் சிறிலங்காவில் தேவையற்ற குறுக்கீடு செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *