இறுதி முடிவுக்காக நாளை மறுநாள் கூடும் ஐந்து கட்சிகள்
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட, ஐந்து தமிழ்க் கட்சிகளும், நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசவுள்ளன.
அதிபர் தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்காக, கொழும்பில் ஐந்து கட்சிகளின் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதும், அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் வரும் 30ஆம் நாள், யாழ்ப்பாணத்தில் ஐந்து கட்சிகளும் கூடி முடிவை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், வரும் 31ஆம் நாளும், நொவம்பர் 1ஆம் நாளும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதால், நேரகாலத்துடன் ஒரு முடிவை அறிவிக்க வேண்டியுள்ளதன் அவசியம் கருதி, இந்தக் கூட்டத்தை நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளையும், பொது இணக்க ஆவணத்தில் ஒப்பமிட ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே மேற்கொண்டுள்ளனர்.