ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா? – மறுக்கிறார் கோத்தா
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா மற்றும், இலங்கை தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்குடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்களை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
இதுபற்றி கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும கூறுகையில்,
”கோத்தாபய ராஜபக்ச மற்றும் அவரது பரப்புரை தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்தவே இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
கோத்தாபய ராஜபக்சவின் பின்புலத்துடனேயே ஹிஸ்புல்லா போட்டியிடுவதாகவும், அப்துல் ராசிக் கோத்தாபயவின் பரப்புரையில் தொடர்புபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை நாங்கள் முற்றாக மறுக்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அப்துல் ராசிக் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவு ஒன்றில், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று தாம் உணருவதாகவும், அவருக்கு தான் தனிப்பட்ட முறையில் ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.