ஐதேக மாநாட்டு நேரலை ஒளிபரப்பை நிறுத்திய தேர்தல் ஆணைக்குழு
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டம் தொடர்பான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பை சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஐதேகவின் சம்மேளனம் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதனை சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி நேரலை ஒளிபரப்பு செய்தது.
இதையடுத்து, நேரலை ஒளிபரப்பை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டது.
இதையடுத்து, நேரலை ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இவ்வாறான நேரலை ஒளிபரப்பு சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதுவரை 21 வேட்பாளர்கள் கட்டுப்பணம்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று நண்பகல் வரை 21 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 7ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், வரும் 6ஆம் நாள் மதியம் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.