படகில் சென்ற 20 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா
சிறிலங்காவில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 20 பேர் நேற்று தனி விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவுஸ்ரேலியாவின் வடமேற்கு கரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை அவுஸ்ரேலிய எல்லைக்காவல் படை அதிகாரிகள் இந்தியப் பெருங்கடலில் வழிமறித்திருந்தனர்.
அந்தப் படகில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்ளிட்ட 20 பேர் இருந்தனர்.
அவர்கள், கிறிஸ்மஸ் தீவில் சில நாட்கள் தங்க வைக்கப்பட்டு, விசாரணைகள் செய்யப்பட்ட பின்னர் நேற்றுக்காலை சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்த மாதம் முதல் வாரம், இந்த அகதிகள் படகு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
படகுகளில் சென்ற அகதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.