குருணாகல மருத்துவ நிபுணர் மீது இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு
குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும், அளவுக்கதிகமான சொத்துக்களை சேகரித்துள்ளார் என்ற சந்தேகத்திலும், குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தற்போது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இவர், 8000இற்கும் அதிகமான சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.
இந்தநிலையில், மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக நேற்று வரை 51 பெண்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
குறித்த மருத்துவரால் மகப்பேற்றின் போது, சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீன் மகப்பேற்று அறுவைச் சிகிச்சையின் போது, பெண்களின் கருவுறும் தன்மையை இழக்கச் செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிறிலங்கா காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சுகாதார அமைச்சும் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரித்து வருகிறது.