உள்நாட்டு பதவி நியமனங்களில் வெளிநாடுகள் தலையீடு – மகிந்த
சிறிலங்காவில் சில முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்காவில் வெளிநாடுகளின் தலையீடுகள் கடுமையாக உள்ளது.
சில நியமனங்களை செய்யும் போது வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறது என்ற உண்மை எனக்குத் தெரியும்.
குறிப்பிட்ட சிலர் பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என்றும் ஏனையவர்களை நிராகரிக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவில் முகாமிட முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
ஆனால், அதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். பல்வேறு முயற்சிகள் இடம்பெற்றது உண்மை.
ஆனால், அத்தகைய உடன்பாடுகளில் சிறிலங்கா அதிபர் கூட, கையெழுத்திட முடியாது என்று கூறி விட்டார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.