சிறிலங்காவில் தமது நிறுவனங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோருகிறது சீனா
சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா கோரியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய குறிப்பு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, காவல்துறை தலைமையகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் சிக்கலாக உள்ளது என்றும் எனவே, சிறிலங்காவில் உள்ள சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பு தேவைப்படுவதாகவும், சீனா அந்த குறிப்பில் வலியுறுத்தியுள்ளது.
சீனா முக்கியமான, நட்பு பங்காளர் என்றும், அது சிறிலங்காவின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும், குறிப்பிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, சீனர்களினதும், சீன நிறுவனங்களினதும் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனாவுக்கு உறுதி அளித்துள்ளது.