மேலும்

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவருக்கு நேற்றிரவு எழுத்துமூல அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  

முதலாவது வழக்கை  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ளார்.

இரண்டாவது வழக்கை, சி்த்திரவதையினால் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

தமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில், அசிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள சிவில் பாதிப்பு  வழக்குத் தொடர்பாக, நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோத்தாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள  அமெரிக்கன் பல்பொருள் அங்காடி வளாளத்தில் உள்ள Traders Joe’s என்ற வணிக நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த வழக்குத் தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிறிலங்காவில் படையினரின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில், யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம், அமெரிக்க சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து மற்றொரு வழக்கை கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.

இந்த சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாகவும், கோத்தாபய ராஜபக்சவிடம் நேற்றிரவு  Traders Joe’s வாகனத் தரிப்பிடத்தில்  வைத்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட றோய் சமாதானம் என்ற தமிழரே, கோத்தாபய ராஜபக்சவிடம், இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண் இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அடுத்த சில நாட்களில் நாடு திரும்பவிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு எதிராக, இருவேறு சட்ட நிறுவனங்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு செயற்பாடுகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கருத்து “கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல்”

  1. Sith Shan says:

    மனிதன் குற்றத்தை மன்னிக்கக்கூடியவன் , ஆனால் கர்மம் ஒருபோதும் மன்னிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *